கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையில் அதிக படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி


கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையில் அதிக படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 7:16 PM GMT)

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி அதிக படங்களை திரையிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது. இதனால் 50-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற புதிய திரைப்படங்களின் வெளியீட்டு குழு கூட்டத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில், 14-ந் தேதி நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் அதிக திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் பேசப்பட்டது. ஆனால் எந்த தயாரிப்பாளரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் வருகிற 21 மற்றும் ஜனவரி 10-ந் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் பண்டிகை விடுமுறை தினத்தன்றுதான் வெளிவர வேண்டும் என்றும், அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் கூறினர். அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை தேதிகளில் அவர்களது திரைப்படங்களை வெளியிட்டுகொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

பொங்கல்- கிறிஸ்துமஸ்

இந்த இரு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள் வரும் வாரம் நடைபெறும் அனைத்து தயாரிப்பாளர்கள் கூட்டத்திற்குப்பின் முடிவு செய்யப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகையில் 50-க்கும் மேற்பட்ட படங்களை திரையிட அனுமதிக்கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. அந்த படங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story