எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வந்தால் ‘‘குமாரசாமியுடன் மேகதாது விவகாரம் குறித்து பேசுவேன்’’ மு.க.ஸ்டாலின் பேட்டி


எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வந்தால் ‘‘குமாரசாமியுடன் மேகதாது விவகாரம் குறித்து பேசுவேன்’’ மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 9:45 PM GMT (Updated: 9 Dec 2018 8:25 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி வந்தால், மேகதாது விவகாரம் குறித்து பேசுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி வந்தால், மேகதாது விவகாரம் குறித்து பேசுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

டெல்லி செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைத்துக்கட்சி கூட்டம்

நாளைய தினம் (அதாவது இன்று) அனைத்துக்கட்சி கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல்காந்தி கூட்டி இருக்கிறார். மத்தியிலே நடந்து கொண்டிருக்கக்கூடிய மதவாதம் பிடித்த பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டக் கூடிய வகையில் ஒரு தரமான கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த கூட்டத்திலேயே ஒரு நல்ல முடிவை எடுக்க இருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க. சார்பில் எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. எனவே, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாளைய தினம் நடைபெறக்கூடிய கூட்டத்திலே நான் பங்கேற்க இருக்கிறேன். அதையொட்டி, இன்று (நேற்று) காலை சோனியாகாந்தியினுடைய பிறந்தநாள் இருக்கின்ற காரணத்தால் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்க மட்டுமல்ல, வருகிற 16–ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை சோனியாகாந்தியால் திறந்து வைக்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தினுடைய முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், புதுவை முதல்–மந்திரி நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், என்னுடைய தலைமையில் அந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவிற்கான அழைப்பை சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும், அதேபோல் அங்கு இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

5 மாநில தேர்தல் முடிவு எப்படி?

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– 5 மாநிலங்களினுடைய தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது. அந்த முடிவுகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?.

பதில்:– தேர்தல் முடிவு வந்ததற்குப் பிறகு அந்த தாக்கத்தை நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

கேள்வி:– ‘கஜா’ புயல் சம்பந்தமாக ஏற்கனவே நீங்கள் அதிக அளவில் வி‌ஷயங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். இது சம்பந்தமாக டெல்லி செல்லும் போது பிரதமர் அலுவலகத்தில் ஏதாவது உங்களின் சார்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்படுமா?.

பதில்:– ஏற்கனவே பிரதமர் பார்வையிட வரவில்லை என்பதைக் கண்டித்து தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். எனவே, இந்தச் சூழ்நிலையில் நீங்கள் கேட்பது போல பிரதமர் அலுவலகத்தை நாங்கள் சந்திக்கின்ற வாய்ப்பு நிச்சயமாக இல்லை. ஏற்கனவே, தமிழக அரசின் சார்பில் அதற்குரிய வலியுறுத்தலை, வற்புறுத்தலை தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம்.

குமாரசாமியுடன் பேசுவேன்

கேள்வி:– மேகதாது விவகாரம் குறித்து சோனியாகாந்தியிடம் எடுத்துச் சொல்லப்படுமா?.

பதில்:– நிச்சயமாக இந்தப் பிரச்சினை குறித்து நாங்கள் விவாதிப்போம். அதுமட்டுமல்ல, நாளைய தினம் நடைபெறவிருக்கக் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தினுடைய முதல்–மந்திரி குமாரசாமி பங்கேற்பார் என்று சொன்னால் அவரிடத்திலே நிச்சயமாக நாங்கள் இதுகுறித்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story