அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:30 PM GMT (Updated: 29 Dec 2018 11:30 PM GMT)

அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28.11.2018 அன்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டும் காணாமலும் இருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

கிராம நிர்வாக அலுவலர்களாக 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வைக்கும் கோரிக்கை மிக மிக முக்கியமானது மட்டுமின்றி, மனித உரிமை தொடர்புடையது. பெண்கள் கண்ணியமாக அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்குக் கூட போராட வேண்டிய அவலநிலை அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய அவமானம்.

ஆளுங்கட்சிக்கு வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மூலம், போராட்டம் வாபஸ் என்ற ஒரு போலியான அறிவிப்பை வெளியிட வைத்து விட்டால் பிரச்சினை முடிந்து விடும் என்று நினைப்பது, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று எண்ணுவது போன்ற கற்பனை என்பதை வருவாய்த்துறை அமைச்சர் உணர வேண்டும். அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமைச்சர்கள் திணறும் போது, முதல்-அமைச்சராக இருப்பவர் உடனடியாகத் தலையிட்டு அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள முதல்-அமைச்சருக்கு அழகு.

ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்களும் சரி, முதல்-அமைச்சராக இருப்பவரும் சரி பொறுப்புணர்ச்சியோ, திறமையோ இல்லாமல் தடுமாறி தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வெட்கக்கேடாக இருக்கிறது. இதனால் கஜா புயல் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான கணக்கெடுப்பும் மோசமான தாமதத்திற்குள்ளாகி, காவிரி டெல்டா பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆகவே தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக போராடி வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் உணர்வுகளை அலைக்கழித்து, அருவருக்கத்தக்க செயலில் அ.தி.மு.க. அரசு ஈடுபடாமல், உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களின் அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் சுமூக தீர்வினை எட்டி, கஜா புயல் பாதிப்புகளால் கதறிக்கொண்டிருக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் முழு மனதோடு, பொறுப்போடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story