சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்


சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்: கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 12:00 AM GMT (Updated: 26 Jan 2019 6:41 PM GMT)

இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை, 

இந்தியாவின் 70-வது குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்.

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக காந்தி சிலை அருகே மேடையும், விழாப் பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தன.

காலை 6.30 மணியில் இருந்தே விழாப்பகுதிக்கு மக்கள் வரத் தொடங்கினர். 7 மணிக்கு மேல் அரசு உயர் அதிகாரிகள் வந்த வண்ணம் இருந்தனர். 7.20 மணியளவில் அமைச்சர்கள் வந்து மேடையில் அமர்ந்தனர்.

7.52 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாப் பகுதிக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் சென்னை போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். காரில் இருந்தபடி சாலையில் இருபுறமும் கூடியிருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையசைத்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் விழா மேடையை ஒட்டி இருந்த அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே காரில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவரைத் தொடர்ந்து 7.54 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார். மோட்டார் சைக்கிள்களில் விமானப்படை வீரர்கள் அணிவகுத்து வர, அவர் காரில் வந்திறங்கினார். அவரும் கையசைத்து பார்வையாளர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கவர்னரை அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் உபசானி, கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர், வான்படை அதிகாரி அவானா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) விஜய்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்த கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். விழாவுக்கு வந்த அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் தூவியது.

அதைத் தொடர்ந்து அணி வணக்க நிகழ்ச்சி நடந்தது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார், செயற்கைகோள் போன்றவைகளின் மாதிரிகளுடன் விமானப்படை வாகனமும்; நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனமும்; ராணுவ கனரக தொழிற்சாலை வாகனமும்; போர்க் கப்பலுடன் கடற்படை வாகனமும் அணிவகுத்து கொண்டு வரப்பட்டன.

கடலோரக் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப். படைப் பிரிவுகள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள், பெண்கள் படை), ஆண், பெண் கமாண்டோ படை பிரிவினர் உள்பட பல பிரிவினர் அணி வகுத்து வந்தனர்.

தொடர்ச்சியாக, கடலோர பாதுகாப்பு குழு, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சாரண சாரணியர் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த 47 அணிகளின் வணக்கத்தை கவர்னர் சல்யூட் அடித்தபடி ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

பதக்கம் பெற்ற அனைவரும் முதல்-அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர், கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில், சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் புனித ரபேல்ஸ் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் சென்னை ராணிமேரி கல்லூரி, வேப்பேரி குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் வண்ண வண்ண உடையணிந்தபடி, ‘சங்கே முழங்கு’ என்ற பாரதிதாசனின் பாட்டுக்கு (இசை ஸ்ரீகாந்த் தேவா) அழகாக நடனமாடினர்.

பள்ளிப் பிரிவில், ரபேல்ஸ் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை வென்றன.

கல்லூரிப் பிரிவில் ராணிமேரி கல்லூரி, குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆகியவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசைப் பெற்றன.

அதைத் தொடர்ந்து கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராஜஸ்தான், தெலுங்கானா, மேகாலயா மாநிலத்தவர் நாட்டியமாடி மகிழ்வித்தனர். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கைச்சிலம்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதில் 15 அரசுத் துறைகள் பங்கேற்றன. அந்தந்தத் துறையின் திட்டங்களை விளக்கும் வகையில் ஊர்திகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

இந்த அலங்கார ஊர்தியில் சிறப்பாக வடிவமைப்பு செய்யப்பட்டிருந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதில், மரணத்தில் இருந்து உயிர் பெற்றெழும் பீனிக்ஸ் பறவை வடிவிலான மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தின் உருவம் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இரண்டாம் பரிசை வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையும், மூன்றாம் பரிசை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையும் பெற்றன. காலை 9.10 மணிக்கு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக, காந்தி சிலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Next Story