அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் செவிலியர்கள் போராட்டம்


அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் செவிலியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 3:28 AM GMT (Updated: 30 Jan 2019 5:23 AM GMT)

அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தஞ்சை,

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 22ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினால் அரசு பணிகள் மற்றும் கல்வி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

தேர்வு நெருங்கும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளி கல்வி துறை அறிவித்தது.

எனினும், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.  இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story