2 மகன்களை கொன்று தாய் தற்கொலை
![2 மகன்களை கொன்று தாய் தற்கொலை 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை](https://img.dailythanthi.com/Articles/2019/Feb/201902200309533443_Kill-2-sonsMother-suicide_SECVPF.gif)
கடலூரில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கூத்தப்பாக்கம் மெயின்ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளார். இவரும், கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சிவசங்கரி (வயது 32) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பாவேஷ்கண்ணா(12), ரதீஷ் கண்ணா (9) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் பாவேஷ்கண்ணா தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், அதே பள்ளியில் ரதீஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மதிவாணன் தன்னுடைய மருந்து கடைக்கு வந்தார். அங்கு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
இறந்து கிடந்த குழந்தைகள்
அப்போது வீட்டுக்கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. இதனால் மதிவாணன் கதவை தட்டினார். ஆனால் சிவசங்கரி எழுந்து வரவில்லை. செல்போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை. பின்னர் நீண்ட நேரம் கழித்து, பக்கத்து வீட்டை சேர்ந்தவரை எழுப்பி வந்தார். பின்னர் அவரும் சேர்ந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டு படுக்கை அறையில் சிவசங்கரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருக்கு கீழே 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். அவர்கள் மீது பூக்கள் தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதிவாணன், அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களும் அங்கே கூடினர்.
கடிதம் சிக்கியது
இது பற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் சிவசங்கரி, தனது 2 மகன்களை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது சிவசங்கரி தனது கணவர், தங்கை, தாய் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக எழுதியிருந்த 4 கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக 2 மகன்களையும் கொன்று சிவசங்கரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story