தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார்; அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம் -அன்புமணி ராமதாஸ்


தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார்; அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம் -அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 25 Feb 2019 8:05 AM GMT (Updated: 25 Feb 2019 8:05 AM GMT)

தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார், ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைவரும் எங்களை அணுகினார்கள் திமுக உள்பட. இது தேர்தலில் இயல்பு. கட்சி நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் ராமதாஸிடம் அதிமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று வலியுறுத்தினார்கள். அந்த அடிப்படையில்தான் அதிமுக கூட்டணிக்கு சென்றோம்.

2016-ம் ஆண்டின் சூழலுக்கு ஏற்ப திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தோம். கடந்த 4 தேர்தல்களில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. 

கடந்த காலங்களில் தி.மு.க. காங்கிரசை கடுமையாக விமர்சித்து உள்ளது. திமுகவையும் ஸ்டாலினையும் முன்பு திருமாவளவன் விமர்சித்து உள்ளார். விமர்சனங்கள்  செய்த காரணத்தால் கூட்டணி வைக்ககூடாது என ஏதாவது இருக்கிறதா. விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற  கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்.

ஸ்டாலின் எங்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஒருவேளை அவர்களுடன் நாங்கள் செல்லவில்லை என்ற காரணத்தினால் இப்படி விமர்சனம் செய்யலாம். எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அந்த தோல்வி பயத்தாலும் எங்கள் மீது அவதூறுகளை வீசி இருக்கலாம். ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம். இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என முடிவெடுத்துள்ளோம். இந்த கூட்டணியால் பாமகவின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story