அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அரசிடம் உளவுத் துறை அறிக்கை
![அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அரசிடம் உளவுத் துறை அறிக்கை அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அரசிடம் உளவுத் துறை அறிக்கை](https://img.dailythanthi.com/Articles/2019/Feb/201902281316062180_AIADMK-will-win-in-20-to-22-seats-State-intelligence-report_SECVPF.gif)
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசிடம் உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக வேகமாக தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டும் பிரதான கட்சிகள். இந்தகட்சிகளை நீண்டகாலமாக வழிநடத்திய ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் இந்த தேர்தலில் இல்லை. அவர்கள் இல்லாமல் இரு கட்சிகளும் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. அதிமுக வைப் பொறுத்தவரை, தற்போது ஆளுங்கட்சி. இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளன. எனவே ஆட்சியையும் தக்கவைக்க வேண்டும்.
ஜெயலலிதா இல்லை என்பதை தாண்டி, டிடிவி தினகரனும் சிக்கல் கொடுத்து வருகிறார்.
தற்போது அமைந்துள்ள அதிமுக - பாமக - பாஜக கூட்டணியை அவர்தான் அதிகம் விமர்சித்து வருகிறார். இந்த சூழலில், அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர்கள், தங்கள் பலத்தை நிரூபித்து அதிகாரத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக அரசின் திட்டங்களுக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது? மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும்? தமிழகத்தின் 39 தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கள நிலவரத்துடன் தமிழக உளவுத் துறையினர் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதன்படி, தமிழக அரசின் இலவச பசுமாடு, ஆடு, கோழி வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் இவற்றுடன் சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 வழங்கியது, தற்போது ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவை அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை திறக்க தடை பெற்றது, மேகேதாட்டு விவகாரத்தில் தொடர்ந்து வழக்கு நடத்தி வருவது, மின்தடை இல்லாத நிலை, சிக்கலான சூழலிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது, நியாயவிலைக் கடைகளில் தடையின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது ஆகியவையும் மக்கள் மத்தியில் அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டை அதிகரித்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் ஆகியவற்றை கையாண்ட விதம் காரணமாக மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுகவுக்கு 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சராசரியாக 60 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், அரசின் குறைகளும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு அரசு நலத் திட்டங்களை மக்கள் பெறுவதற்கு, அரசியல் கட்சி சார்ந்த இடைத்தரகர்கள் தடையாக இருக்கின்றனர். இதனால், முழுமையான பலன் மக்களுக்கு சேர்வதில் சிக்கல்கள் உள்ளன என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாவிட்டாலும், காவல் துறையினரின் செயல்பாடுகள் சில இடங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story