சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் மே 2-ந் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு


சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் மே 2-ந் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 21 April 2019 11:40 PM GMT (Updated: 21 April 2019 11:40 PM GMT)

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மே 2-ந் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி நீங்களாக ஏனைய 38 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.

அதன்பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ந் தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ந் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

மே மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 23-ந் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட இருக்கிறது.

Next Story