28-ந் தேதி தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


28-ந் தேதி தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2019 12:00 AM GMT (Updated: 24 April 2019 6:55 PM GMT)

தமிழகத்தை நோக்கி 28-ந் தேதி புயல் வர வாய்ப்பு உள்ளதால், நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சென்னை, 

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனினும் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெறுவதாகவும், அது 29-ந் தேதி தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்தது. தற்போது 28-ந் தேதியே தமிழக கடற்கரை பகுதியை நோக்கி புயல் வர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இந்த தாழ்வு பகுதி நாளை (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இது 27, 28-ந் தேதிகளில் புயலாக வலுப்பெறும். அந்த புயல் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மழை இருக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளுக்குள் வரும்போது சென்னை உள்பட பல இடங்களில் மழை இருக்கும். தற்போது வரை தமிழக கடற்கரை பகுதியை கடந்து செல்லலாம் அல்லது கடற்கரை பகுதியை ஒட்டியவாறு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரை பகுதியை கடந்து சென்றால், தென் தமிழகத்தின் பகுதியாக நுழைந்து கேரளாவுக்கு செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டியவாறு கடந்து சென்றால் ஆந்திராவை நோக்கி செல்லும்.

கடற்கரை பகுதியை ஒட்டி செல்லும்போது அதன் இடைவெளி 200 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் என்று இருந்தால் மழை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

கீரனூர் 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., தேவலா 3 செ.மீ., மதுக்கூர், வந்தவாசியில் தலா 2 செ.மீ., ஆய்க்குடி, தென்காசி, சங்கரன்கோவில், சூலகிரி, தேன்கனிக்கோட்டை, பட்டுக்கோட்டை, பேச்சிப்பாறை, தாளவாடி, பவானிசாகர், மன்னார்குடி ஆகிய இடங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.

Next Story