சென்னை தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு, நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு,  நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல்,  போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2019 12:15 AM GMT (Updated: 22 Jun 2019 11:17 PM GMT)

நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் வாக்குப்பதிவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரியில் அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியை எதிர்த்து டைரக்டரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகள் இருப்பதால் வாக்குப்பதிவின் போது மோதல் சம்பவம் நடைபெறலாம் என்று அந்த கல்லூரி நிர்வாகத்துக்கு பட்டினபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம் அனுப்பினார்.

இதனால், தேர்தல் நடத்துவதற்கு போலீஸ் அனுமதியை பெற்று வரும்படி நடிகர் சங்கத்துக்கு, கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடுமாறு கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்த கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இதனால், தேர்தலை நடத்துவதற்கு வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, பதிவாளர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, திட்டமிட்டபடி தேர்தலை இன்று நடத்துமாறு உத்தரவிட்டார். அதேசமயம், மறுஉத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்றும், தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என்றும் கூறினார்.

இந்தநிலையில், நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு நிலுவையில் உள்ள வழக்கை விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற நடிகர் விஷால் தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நேற்று மாலை 5 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்து விசாரித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் வாதாடுகையில், “தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினைக்காக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால், இந்த போராட்டங்களை போலீசார் சமாளிக்க வேண்டியதுள்ளது. கடைசி நேரத்தில் மனுதாரர் பாதுகாப்பு கேட்கிறார்” என்று கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணா ரவீந்திரன் வாதாடுகையில், மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

நடிகர் சங்க தேர்தலை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடத்த வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பள்ளியை காலி செய்து விட வேண்டும்.

தேர்தலை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும். அவரது தேர்தல் பணியில் யாரும் தலையிடக்கூடாது. தேர்தலின்போது யாராவது தகராறில் ஈடுபட்டால், அவர்கள் மீது போலீசார் உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேர்தல் நடைபெறும் பள்ளி வளாகத்துக்குள் மட்டுமே போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த போலீஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவு தொகை அனைத்தையும், நடிகர் சங்கம் ஏற்கவேண்டும். அந்த தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.

மேலும், புனித எப்பாஸ் பள்ளி இருக்கும் இடம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, பள்ளிக்கு வெளியில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. பள்ளி வளாகத்துக்குள்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களை தேர்தல் மையத்துக் குள் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story