பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை -முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்


பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை -முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 28 Sep 2019 7:10 AM GMT (Updated: 28 Sep 2019 10:29 AM GMT)

இன்று மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள புனித நீர்நிலைகளில் ஏராளமானோர் நீராடி, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

சென்னை

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறப்பான நாளாகும். அதுவும் இந்தமுறை சனிக்கிழமையில் வருவதால் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.

இந்நாளில், புனித தலங்களில் உள்ள நீர் நிலைகளிலும், புனித நதிகளிலும் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு படையலிட்டும், தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டால் கர்மா நீங்கி அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் கருப்பு உளுந்து, கறுப்பு எள், வெல்லம், உப்பு, புத்தாடை போன்றவற்றை தானம் அளித்து வழிபடுவதும் மிகவும் சிறப்பு என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காசிக்கு நிகராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மேற்குபுறம் அமைந்திருக்கும் கமலாலய தீர்த்த குளத்தில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு அரிசி, வாழைக்காய், தேங்காய், காய்கறிகள், பழங்கள் வைத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் திதி கொடுத்தனர். இதையடுத்து, 22 தீர்த்தங்களில் புனித நீராட சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் நலன் கருதியும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளத்தில் மகாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் அமர்ந்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, பித்ருகடன்களை நிறைவேற்றினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் எள் தண்ணீர் இட்டு வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பூஜை செய்து அதனை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

இந்த முறை மக்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால் போதிய போலீசார் இல்லாதநிலையில் நெரிசல் ஏற்பட்டு அவதியுற்றதாகவும், மேலும் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்கங்கள் நிறுத்தப்பட்டதால் நடந்தே சென்றதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

இதே போல அய்யாளம்மன், சிந்தாமணி, ஓடத்துறை ஆகிய காவிரி படித்துறையிலும் முன்னோர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திதி கொடுத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் மகாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து மறைந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், பழங்கள், தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்காலில் அரசலாறும், கடலும் சங்கமிக்கும் பகுதியில் தர்ம ரக்க்ஷிண சமிதி சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் எள் தண்ணீரை கடலில் விட்டு நீரில் மூழ்கி வழிபாடு நடத்தினர்.

Next Story