இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.8.72 கோடி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தகவல்


இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.8.72 கோடி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:00 PM GMT (Updated: 11 Nov 2019 10:00 PM GMT)

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.8.72 கோடி என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்தோடு நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8.72 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் லாபம் ரூ.1.43 கோடியாக இருந்தது. அதேசமயத்தில் மொத்த வருவாய் ரூ.1,390.84 கோடியில் இருந்து ரூ.1,248.94 கோடியாக குறைந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் சிமெண்டு விற்பனை 30.77 லட்சம் டன்னில் இருந்து 26.67 லட்சம் டன் ஆக குறைந்துள்ளது.

இது 13 சதவீதம் வீழ்ச்சி ஆகும். நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்தோடு நிறைவடைந்த முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர்) நிகர லாபம் ரூ.80.93 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.22.46 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,757 கோடியாக இருந்த மொத்த வருமானம் நடப்பாண்டில் ரூ.2,720 கோடியாக குறைந்துள்ளது.

சிமெண்டுக்கான தேவை

இதுகுறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன் கூறியதாவது:-

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிமெண்டுக்கான தேவை குறைந்ததன் காரணமாக அந்த 2 மாநிலங்களில் 3 லட்சம் டன் (மாதத்துக்கு தலா ஒரு லட்சம் டன்) சிமெண்டு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த மாநிலங்களில் 4 சிமெண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. விற்பனை வீழ்ச்சியடைந்ததால், அந்த ஆலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் சிமெண்டுக்கான தேவை நன்றாக இருந்தது.

சிமெண்டு விற்பனை பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் குறைவான மின்சார பயன்பாடு, மூலப்பொருட்கள் மற்றும் பிற செலவினங்களை குறைத்ததன் காரணமாக இயக்க செயல்பாடு கணிசமாக மேம்பட்டுள்ளது. இதனால் விற்பனை பாதிப்பு சரிக்கட்டப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது அரையாண்டில் (அக்டோபர் முதல் மார்ச்) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிமெண்டு தேவை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த இழப்பினை இனிவரும் காலங்களில் ஈடுகட்டிவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story