உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Feb 2020 12:15 AM GMT (Updated: 17 Feb 2020 10:40 PM GMT)

வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

சென்னை, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை யில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி குறிப்பிட்டார்கள். அதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடும் என்று வந்த தகவலின் அடிப்படையில், 14.2.2020 அன்று காலை 11 மணிக்கு இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 13 பள்ளிவாசல்களின் சார்பாக, அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் தலைமையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அப்பொழுது அவர்கள் 14.2.2020 அன்று போராட்டம் நடத்தும் எண்ணம் ஏதும் இல்லை என்று ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர். மேலும், 23.2.2020 அன்றுதான் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டி மனு செய்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 14.2.2020 அன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில், சுமார் 200 பெண்கள் உள்பட 300 இஸ்லாமியர்கள், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணன் ரவுண்டானா அருகில் குழுமி, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், ஆர்ப்பாட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது எனவும், இப்போராட்டத்தினால், போக்குவரத்து பாதித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கும் எனவும் எடுத்துரைத்தனர்.

ஆனால், மேற்படி நபர்கள் காவல் துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி மறியலில் ஈடுபட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவதூறு கோஷங்கள் எழுப்பியதால் 40 ஆண்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். பஸ்சுக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வைகை மகால் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.

அரசு பஸ்சை சேதப்படுத்தியது சம்பந்தமாக, பஸ் ஓட்டுனர் கொடுத்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்படி சம்பவத்தை தொடர்ந்து, மாலை சுமார் 6 மணி அளவில் கண்ணன் ரவுண்டா அருகில், இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் அனுமதி இல்லாமல் அதிக அளவில் கூடி கோஷமிட்டவாறு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக செயல்பட்டனர்.

அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பலமுறை காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட காவல் துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், அவர்களை கைது செய்வதாக மீண்டும் எச்சரிக்கப்பட்டனர். அதனையும் மீறி, காவல் துறையினரை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் ஆகியவற்றை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில், ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமாருக்கு வலது கையில் காயமும், பெண் காவலர் உதயகுமாரிக்கு வலது கன்னம் மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளிலும், மற்றொரு பெண் காவலர் கலாவிற்கு வலது கண்ணிலும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், போராட்டக்காரர் கள் எறிந்த கல்லால் கண்ணன் ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விஜயகுமாரிக்கு தலையில் காயம் எற்பட்டு, மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

போராட்டக்காரர்கள் கலவரத்தை தூண்டக்கூடாது எனவும், அமைதியான முறையில் தங்களுடைய கோரிக்கைகளை சொல்லி விட்டு கலைந்து செல்லுமாறும் காவல் துறையினர் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். ஏற்கனவே போராட்டக்காரர்கள் அரசு பஸ்சை சேதம் செய்ததையும், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதையும், பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, தடுப்புகள் அமைத்து, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அரணாக இருந்தனர்.

சிறிது நேரத்தில், வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள், அப்பகுதி மக்களை தூண்டி விட்டு காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை தள்ளிவிட்டு வெளியே வந்து அங்கு அரணாக நின்று கொண்டிருந்த காவல் துறையினரை ஆக்ரோஷமாக தள்ளி விட்டு, சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அப்போது அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல் துறையினர் மீது கற்கள், பாட்டில் மற்றும் செருப்புகளை வீசினார்கள்.

இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 82 பேரை கைது செய்து, அரசு பஸ்சில் ஏற்றியபோது, பஸ்சில் ஏறியவர்கள், பஸ்சுக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டு, பஸ்சின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். மேற்படி போராட்டகாரர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள வாணி மஹால் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் தடுப்பு) ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 6 தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த 70 வயது நிரம்பிய பசுருல்லா என்பவர் நோயின் காரணமாக இயற்கையாக மரணம் அடைந்தார். ஆனால், அவர் காவல் துறையினரின் தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டது. அந்த வதந்தியை நம்பி சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இரவு 9.30 மணி முதல் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களான எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அமீர் அம்சா, எஸ்.டி.பி.ஐ. வட சென்னை மாவட்ட தலைவர் காஜா மொய்தீன், எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம் மக்கள் தொண்டு இயக்கத்தலைவர் அப்பல்லோ ஹனீபா, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தேசிய தவ்ஹீத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன், இந்திய தேசிய லீக் தலைவர் கோனிக்கா பஷீர், சம்சா ஷேக், நிஜாமுதீன், உஸ்மான் அலி, நசுருதீன், சர்வேஸ் ரசாதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டு, கைது செய்யப்பட்ட வர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கோஷமிட்டவாறு இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

15.2.2020 அன்று முழுவதும், கண்ணன் ரவுண்டானாவில், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பெண்களும், ஆண்களும் அந்த ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்திலே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டனர். இந்நிலை யில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மீண்டும் 15.2.2020 அன்று இரவு 8.30 மணி அளவில் மீண்டும் இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்பினர், தங்களின் ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்களை வன்முறையில் ஈடுபடாமல், சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வலியுறுத்தினார்.

மேற்படி கலந்தாய்வு கூட்டம் முடிந்தவுடன், இரவு மீண்டும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், 14.2.2020-ந்தேதி வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேட்டி அளித்தனர்.

மூன்றாவது நாளாக 16.2.2020 அன்றும் தொடர்ந்த போராட்டத்துக்கு மருத்துவர் அணி செயலாளர் சாந்தி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் காயத்ரி காந்தாடை ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் லத்தீப் தலைமையில் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கின்றார்கள்.

அதேபோல, 16.2.2020 அன்று இரவு என்னுடைய இல்லத்திலே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் மற்றும் அக்கட்சியிலே இடம் பெற்றிருக்கின்ற பல்வேறு நிர்வாகிகள் என்னை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்திருக்கின்றார்கள். இன்று (நேற்று) காலை 9 மணியளவில் மேற்படி இடத்தில் சுமார் 75 பெண்கள் உள்பட 150 நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் இதற்கு முன்பு பல்வேறு இடங்களிலேயே ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது. காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் முழு பாதுகாப்பு அளித்தார்கள். இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இன்றைக்கு அந்த ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஆனால் வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரிலே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

ஆகவே, பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறம் தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிறுபான்மையின சகோதர சகோதரிக்கு எதிரான எந்த ஒரு செயலையும் இந்த அரசு அனுமதிக்காது. இந்த அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story