கொரோனா பாதிப்பால் 1½ வயது குழந்தை உயிரிழப்பு; சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று


கொரோனா பாதிப்பால் 1½ வயது குழந்தை உயிரிழப்பு; சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 28 Jun 2020 11:30 PM GMT (Updated: 28 Jun 2020 9:55 PM GMT)

விழுப்புரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1½ வயது பச்சிளங் குழந்தை நேற்று உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் இல்லாமல் தாக்கி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக ஆளாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1½ வயது குழந்தை பலியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 175 பேரும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 399 ஆண்களும், 1,541 பெண்களும் பாதித்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 216 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 428 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் என மொத்தம் 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 34 பேரும், மதுரை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், ராமநாதபுரம், திருவள்ளூரில் தலா 2 பேரும், விழுப்புரத்தில் 1½ வயது குழந்தையும், காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், நெல்லையில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழக மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் 1,443 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 35 ஆயிரத்து 656 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழத்தில் நேற்று 35 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர். இந்த மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் 1,992 பேரும், மதுரையில் 284 பேரும், செங்கல்பட்டில் 184 பேரும், கள்ளக்குறிச்சியில் 169 பேரும், திருவண்ணாமலையில் 142 பேரும், சேலத்தில் 109 பேரும், திருவள்ளூரில் 99 பெரும், ராமநாதபுரத்தில் 93 பேரும், காஞ்சீபுரத்தில் 92 பேரும், திருவாரூரில் 87 பேரும், வேலூரில் 85 பேரும், தேனியில் 62 பேரும், விருதுநகரில் 61 பேரும், விழுப்புரத்தில் 47 பேரும், திருச்சியில் 43 பேரும், கடலூரில் 39 பேரும் புதுக்கோட்டையில் 36 பேரும், தூத்துக்குடியில் 34 பேரும், கோவையில் 32 பேரும், தென்காசியில் 29 பேரும், சிவகங்கையில் 27 பேரும், திருப்பத்தூர், கன்னியாகுமரியில் தலா 24 பேரும், தஞ்சாவூரில் 23 பேரும், நெல்லையில் 22 பேரும், நாகப்பட்டினத்தில் 14 பேரும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 10 பேரும், தர்மபுரியில் 6 பேரும், நீலகிரி, திண்டுக்கலில் தலா 5 பேரும், அரியலூர், திருப்பூரில் தலா 3 பேரும், நாமக்கலில் இருவரும், பெரம்பலூரில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். கரூர், கிருஷ்ணகிரியில் பாதிப்பு எதுவும் இல்லை.

தமிழகத்தில் இதுவரை சென்னையில் 809 பேரும், செங்கல்பட்டில் 80 பேரும், திருவள்ளூரில் 61 பேரும், மதுரையில் 25 பேரும், காஞ்சீபுரத்தில் 19 பேரும், விழுப்புரத்தில் 14 பேரும், திருவண்ணாமலையில் 9 பேரும், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் தலா 6 பேரும், கடலூர், விருதுநகரில் தலா 5 பேரும், வேலூர், திருச்சி, தூத்துக்குடியில் தலா 4 பேரும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், தேனி, சிவகங்கை, சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் தலா இருவரும், கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் விமானநிலைய கண்காணிப்பில் தலா ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 402 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story