நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 698 பேருக்கு கொரோனா: தென்காசியில் 64 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 29 July 2020 10:05 PM GMT (Updated: 29 July 2020 10:05 PM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று புதிதாக 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நெல்லை மாநகர பகுதியில் 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,729 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நேற்று 80 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரை கொரோனா பறித்துக்கொண்டது. இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 68 வயது முதியவரும், நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 62 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். தூத்துக்குடியை சேர்ந்த 82 வயது முதியவர், தாளமுத்துநகரை சேர்ந்த 73 வயது முதியவர், ஆறுமுகநேரியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, நாசரேத்தை சேர்ந்த 49 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

இதேபோன்று தூத்துக்குடியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் நெல்லையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 316 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆத்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், தட்டார்மடம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,911 ஆக உயர்ந்துள்ளது.


Next Story