உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது - பொதுக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jan 2021 9:36 AM GMT (Updated: 9 Jan 2021 9:36 AM GMT)

உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது என்று பொதுக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுக்குழுவில் மேலும் பேசிய அவர், “இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம். சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். ஏப்ரல்,மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெற வேண்டும்.

நான் அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டன். எனது வார்த்தைகள் அனைத்தும் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து வருபவை. மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன். திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி. ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்” என்று கூறினார்.  

Next Story