கொளத்தூரில் இருப்பது போன்று மாவட்டங்கள்தோறும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு


கொளத்தூரில் இருப்பது போன்று மாவட்டங்கள்தோறும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2021 12:30 AM GMT (Updated: 10 Feb 2021 10:21 PM GMT)

கொளத்தூரில் இருப்பது போன்று மாவட்டங்கள்தோறும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 5-வது பிரிவாக ‘டேலி’ பயற்சி முடித்த 81 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 6-வது பிரிவாக ‘டேலி’ பயற்சி பெற்றுவரும் 89 மாணவிகளுக்கு நோட்டு, பேனாக்கள் வழங்கினார்.

செம்பியம் லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டுத் திடலை மேம்படுத்தி, கூடைப்பந்தாட்ட கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பந்தர் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் எம்.பி. நிதியில் இருந்து ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தைத் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவிகள், பயனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.

சொந்தக்காலில் நிற்கவேண்டும்

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும். வேலைக்குச் செல்லவேண்டும். சொந்தக்காலில் நிற்கவேண்டும். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறவன் நான். அந்த நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கத்தான் இந்த அகாடமியை அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் கொளத்தூரில் 2019-ம் ஆண்டு தொடங்கினேன்.

பெண்களுக்கு கல்வியைத்தாண்டி ஒரு கூடுதல் தகுதி கொடுப்பதற்காகத்தான் ‘டேலி’ வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்றிருக்கும் எத்தனையோ பேர் பெரிய பெரிய நிறுவனங்களில் இன்றைக்கு பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்திருக்கிறது. சம்பளமும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். வேலை கிடைத்தது என்பதை விட, சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்திருப்பது தான் முக்கியம்.

15-ந்தேதி முதல் பயிற்சி

‘டேலி’ வகுப்போடு, தையல் பயிற்சி வகுப்பு, இளைஞர்களுக்குத் தனிப்பயிற்சி மையம் என்று விரிவடைந்து அனிதா அச்சீவர்ஸ் இன்றைக்கு மினி கல்லூரியைப் போல வளர்ந்து வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. முதல் அணியில் 61 பேரும், 2-வது அணியில் 67 பேரும், 3-வது அணியில் 71 பேரும், 4-வது அணியில் 67 பேரும், 5-வது அணியில் 82 பேரும் இதுவரை அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் இதுவரை 348 பேர் பயிற்சி பெற்று வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள்.

இப்போது 6-வது அணியில் 89 பேர் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 7-வது அணிக்கு, 80 மாணவிகள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வருகிற 15-ந்தேதியில் இருந்து பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 517 மாணவியர்கள் இதுவரை பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பயிற்சி பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை பொறுத்தவரையில் 80 பேர் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 80 மாணவர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள். 80 மாணவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் வருகிற 15-ந்தேதி அந்த பயிற்சி தொடங்க இருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம்

அதேபோல தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் 196 பேர் இதுவரையில் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 199 பேர் பயிற்சியில் இருக்கிறார்கள். புதிதாக 360 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அதுவும் வருகிற 15-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. எனவே ஒரு குடும்பம் போல இன்றைக்கு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இத்தனை குடும்பங்களுக்கும் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.

தமிழகத்தை பொறுத்தவரையில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. படித்தவர்களுக்கு வேலை இல்லை. வேலைவாய்ப்பு பதிவு செய்யும் அலுவலகத்தில் லட்சக்கணக்கில் வேலை கேட்டு படித்த பட்டதாரிகள் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி இப்போது இருக்கும் ஆட்சிக்கு எந்த கவலையும் இல்லை. அதனால்தான் இன்றைக்கு இளைஞர்களின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும்...

இன்னும் 3 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கப்போகிறோம். கொளத்தூரில் மட்டும் தொடங்கினால் போதாது. தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு தி.மு.க. தலைவர் என்ற முறையில் இப்போதே சொல்கிறேன், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story