சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம் மாநகராட்சி கமிஷனர் தகவல்


சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2021 12:15 AM GMT (Updated: 12 Feb 2021 9:17 PM GMT)

சென்னையில் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து மாவட்ட அளவிலான 3-வது கட்ட ஆய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கோ.பிரகாஷ் பேசியதாவது:-

சென்னையில் இதுவரை33 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டு, அடுத்த 28 நாட்கள் கழித்து 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட வேண்டும். அந்தவகையில் நாளை (இன்று) முதல் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கிறது.

தினமும் சென்னையில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு எல்லாவித நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.

ஒரு வாரத்துக்குள்...

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்கள், இனி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு தான், வாய்ப்பை தவறவிட்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

சென்னை மாநகராட்சியில் போதுமான அளவு தடுப்பூசிகள் பாதுகாப்பாக உள்ளன. அந்தவகையில் 20 லட்சம் தடுப்பு மருந்துகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொண்டால் தான் 100 சதவீத பாதுகாப்பான நகரமாக சென்னை இருக்கும்.

ஆதாரம் கிடையாது

சென்னையில் இதுவரை 60 தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 50 முதல் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதுவரை 128 இடங்களில் வெற்றிகரமாக அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் மது அருந்த கூடாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. அதாவது, மது அருந்தும் பழக்கத்துக்கோ, தடுப்பூசிக்கோ, மருத்துவ ரீதியாக எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் இணை கமிஷனர்கள் சங்கர்லால் குமாவத், எஸ்.திவ்யதர்ஷினி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story