வழக்குகள் வாபஸ்:முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரை தமிழக மக்கள் நன்கறிவார்கள்; மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
x
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி 19 Feb 2021 7:23 PM GMT (Updated: 19 Feb 2021 7:23 PM GMT)

முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவர்களைப் பல வகைகளிலும் வதைத்ததுடன், வழக்கும் போட்டுத் துன்புறுத்தியதை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். 

இந்த வழக்குகளால் இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயணம் உள்ளிட்ட பல வாழ்வாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டு வருவதை கடந்த ஜனவரி மாதமே விரிவாக எடுத்துரைத்த போதும், அலட்சியம் காட்டிய அ.தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது என்றதும் வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார்.

சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்படும் எனவும் தனது பரப்புரையில் வரிசையாக அறிவித்திருக்கிறார்.

முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றபோதும், தி.மு.க. முன்வைத்த கோரிக்கையைக் காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்த அரசு உள்ளது. வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story