அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 April 2021 1:43 AM GMT (Updated: 10 April 2021 1:43 AM GMT)

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நீக்கி, அவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தது செல்லாது என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த பொதுக்குழுவையும், அதில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களையும் செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருவதால் அவ்வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ரவி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவி, மனுவுக்கு பதில் அளிக்க சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 


Next Story