நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு


நாளுக்கு நாள் வேகமாக பரவும் தொற்று: தமிழகத்தில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 April 2021 11:14 PM GMT (Updated: 21 April 2021 11:14 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6,973 ஆண்கள், 4,708 பெண்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 70 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 436 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,582 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 3,750 பேரும், செங்கல்பட்டில் 947 பேரும், கோவையில் 715 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 43 பேரும், கள்ளக்குறிச்சியில் 38 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

53 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 18 ஆயிரத்து 809 ஆண்களும், 4 லட்சத்து 6 ஆயிரத்து 214 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 37 ஆயிரத்து 171 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 42 ஆயிரத்து 904 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் என 53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

7,071 பேர் ‘டிஸ்சார்ஜ்’

இதில் சென்னையில் 18 பேரும், காஞ்சீபுரத்தில் 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும், கடலூர், வேலூரில் தலா 3 பேரும், அரியலூர், சேலம், திருச்சியில் தலா 2 பேரும், கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், தென்காசி, தேனி, நெல்லை, திருப்பூரில் தலா ஒருவரும் என 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 258 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7,071 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,440 பேரும், செங்கல்பட்டில் 712 பேரும், கோவையில் 457 பேரும் அடங்குவர். இதுவரையில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 84 ஆயிரத்து 361 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story