புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்துங்கள்; இந்தி பேசாத மாநில முதல்-மந்திரிகளுக்கு வைகோ கடிதம்


புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்துங்கள்; இந்தி பேசாத மாநில முதல்-மந்திரிகளுக்கு வைகோ கடிதம்
x
தினத்தந்தி 27 April 2021 10:27 PM GMT (Updated: 27 April 2021 10:27 PM GMT)

புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்தி பேசாத மாநில முதல்-மந்திரிகளுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்தி பேசாத மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள், பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கு, மின்னஞ்சல் வழியாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தி எதிர்ப்பு புரட்சி

இந்திய விடுதலையின்போது, கல்வி மாநில அரசுகளின் அதிகார பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் அரசு, கல்வியை மாநில பட்டியலில் இருந்து, பொது பட்டியலுக்கு மாற்றியது. 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு புரட்சி வெடித்தது. கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரையிலும், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக நீடிக்கும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி அகற்றம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை என அறிவித்தார். உலகம் முழுமையும் இந்தியை பரப்புவதற்காக, மத்திய அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது. ஆனால், மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை.

அதிகார பரவல் மறுப்பு

இதுவரை இந்தியை பரப்பியது போதாது என்று, புதிய கல்வி கொள்கையின் வழியாக, சமஸ்கிருத மொழியை கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பா.ஜ.க. அரசு தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் சில ஆயிரம் பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல 100 கோடி ரூபாய் செலவில், பல பல்கலைக்கழகங்களை தோற்றுவித்து இருக்கிறார்கள்.

புதிய கல்வி கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்கிறது. கூட்டாட்சி தத்துவத்தையும், அதிகார பரவலையும் மறுக்கிறது.

தனியார் மயம்

மாநில அரசுகளிடம் இருக்கிற கல்வியை, தனியார்மயம் ஆக்குகிற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கிறது. எனவே, இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணித்து, மாநில மொழிகளை ஒழித்து கட்ட திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிற பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து எதிர்ப்பு கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story