கொரோனா பரவல் சூழலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


கொரோனா பரவல் சூழலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 12:47 AM GMT (Updated: 1 May 2021 12:47 AM GMT)

கொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மெரினா ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசாரும் இரவு-பகலாக 24 மணி நேரம் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களின் அனைத்து நடவடிக்கைகளும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் வளையத்துக்குள் உள்ளன.

1 லட்சம் போலீசார்

இந்தநிலையில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே.2-ந்தேதி (நாளை) நடக்கிறது. கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை, வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை அல்லது 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

தேர்தல் முடிவால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால், கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னையை பொறுத்தவரையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். முக்கிய சந்திப்புகள், கட்சி அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் அமர்த்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணும் மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், ஊடகத்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவல் தொடர்பாக பாஸ் வைத்திருப்போர் மற்றும் மையங்களில் அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் தவிர, வேறு யாரும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனை அல்லது அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரத்துக்கு முன்பாக சோதனை செய்து அதற்கான ‘நெகட்டிவ் சர்டிபிகேட்’ அல்லது இருமுறை தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும்.

* வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளே நுழையும்போது ஒவ்வொரு நபருக்கும் வெப்பநிலை சோதனையில் 98.6 டிகிரிக்கு குறைவாக இருக்க வேண்டும்.

* தேர்தல் ஆணையம் வெற்றி ஊர்வலம் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. எனவே வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும்போது 2 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

குடிபோதையில்...

* மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* குடிபோதையில் உள்ளவர்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க முடியாது.

* வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியே செல்லும் வேட்பாளர்களின் முகவர்கள் மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.

* வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை பணம் கொடுத்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் கூட தடை

* கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தவிர வேறு யாரும் வெளியே வர வேண்டாம். வாக்கு எண்ணும் மையங்களின் வெளியே கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி வெற்றி கொண்டாட்டம், ஊர்வலத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Next Story