வாக்கு எண்ணும் இடங்களில் குவிய வேண்டாம்; ‘தேர்தல் வெற்றி செய்தி கேட்கும் நேரத்தில் வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்’; தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


வாக்கு எண்ணும் இடங்களில் குவிய வேண்டாம்; ‘தேர்தல் வெற்றி செய்தி கேட்கும் நேரத்தில் வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்’; தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 May 2021 12:52 AM GMT (Updated: 1 May 2021 12:52 AM GMT)

வாக்கு எண்ணும் இடங்களில் குவிய வேண்டாம். தேர்தல் வெற்றி செய்தியை கேட்கும் நேரத்தில் வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் தி.மு.க.வை சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.

இல்லத்திலேயே...

தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன். இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர, வர ஒன்று கூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகி விட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

உள்ளங்களில் மகிழ்ச்சி

தி.மு.க. வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story