தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2021 10:22 PM GMT (Updated: 2 May 2021 10:22 PM GMT)

தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் சூழ்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் பொதுமக்கள் கொண்டாட்டங்களை நடத்துவதாக ஊடகங்கள் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.

இது தேர்தல் ஆணையம் ஏற்கனவே இதுபோன்ற செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. தற்போது அங்கு நடைபெறும் கொண்டாட்டங்கள், அந்த உத்தரவுகளுக்கு முரணான செயல்பாடு ஆகும்.

உடனடி பணியிடை நீக்கம்

கொரோனா தொற்று நிலவும் இந்த சூழ்நிலையில் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு தடை விதிப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, இந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அலுவலர்கள் கண்டிப்பாக உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற அல்லது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்சி தொண்டர்கள்

இதற்கிடையே அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர், பொதுச் செயலாளருக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை எந்தவித வெற்றிக்கொண்டாட்டங்களுக்கும் தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. ஆனால் இதை மீறும் வகையில் தமிழகத்தில் சில இடங்களில் தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை கட்சி தொண்டர்கள் கொண்டாடுவதாக தெரிகிறது.

வருத்தம்

ஒன்று கூடும் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் தனது வருத்தத்தை தெரியப்படுத்திக் கொள்கிறது.

கொரோனா பரவல் தற்போது சவாலாக இருக்கும் இந்த சூழ்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொண்டாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கட்சியினருக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

வழக்கு

வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story