அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”


அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி: “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்”
x
தினத்தந்தி 3 May 2021 8:02 PM GMT (Updated: 3 May 2021 8:02 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் “தொடர்ந்து மக்கள் பணியாற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வாக்காளர்களுக்கு நன்றி

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தங்களது பொன்னான வாக்குகளை அளித்துள்ள வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

எதிர்க்கட்சி பணி

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்னும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடனும், கட்சியின் கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடமையைத் தொடருவோம்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அ.தி.மு.க. தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், அ.தி.மு.க.வை கட்டிக் காக்கும் கடமையில் தோளோடு, தோள் நின்று உழைப்பதற்கும், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அ.தி.மு.க.வை காப்போம். கடமைகளைத் தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story