தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம்: தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்ப பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்


தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம்: தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்ப பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2021 7:04 PM GMT (Updated: 8 Jun 2021 7:04 PM GMT)

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம்: தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்ப பெற வேண்டும் வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டியெடுத்து குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப்பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்த திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் முடிவையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகின்றது. எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப்பெறவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலிருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடைவிதிக்கும் தீர்ப்பை பெறவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story