அண்ணா, கருணாநிதி காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல் திருவள்ளுவர் ஓவியம் மீண்டும் பொலிவு பெறவேண்டும்


அண்ணா, கருணாநிதி காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல் திருவள்ளுவர் ஓவியம் மீண்டும் பொலிவு பெறவேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2021 8:23 PM GMT (Updated: 11 Jun 2021 8:23 PM GMT)

அண்ணா, கருணாநிதி காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல் திருவள்ளுவர் ஓவியம் மீண்டும் பொலிவு பெறவேண்டும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதியன்று, முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு, வரலாற்று சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கே.ஆர். வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்டு, மத்திய-மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவர் உருவப்படம், தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பஸ்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டது.

சாதி, மத பேதம் அற்ற பொதுநோக்கம், குறள்வழியில் நிலைநிறுத்தப்பட்டது. குறள் ஓவியம் தந்த கருணாநிதி, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை நிறுவி, வள்ளுவத்தின் புகழை பார் அறியச்செய்தார். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், திருவள்ளுவரின் உண்மை உருவத்தை படிப்படியாக மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு, மெல்ல, மெல்லத் தங்கள் சுயநல மத அரசியலை, திருவள்ளுவரின் மேல் போர்த்த தொடங்கினர். திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசத் தொடங்கினர். காப்புரிமை பெறப்பட்ட மத்திய, மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட, அரசுடமை ஆக்கப்பட்ட அந்தத் திருவள்ளுவர் ஓவியம், அண்ணா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல், மீண்டும் பொலிவு பெறவேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு பஸ்களில் திருவள்ளுவர் ஓவியப்படம் இடம் பெறச்செய்யவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story