கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்: தமிழகத்தில் 6,162 பேருக்கு கொரோனா


கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்: தமிழகத்தில் 6,162 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jun 2021 10:03 PM GMT (Updated: 24 Jun 2021 10:03 PM GMT)

தமிழகத்தில் நேற்று கோவை, ஈரோடு மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருந்தது. மேலும் ஒரே நாளில் 6,161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று கோவை, ஈரோட்டில் மட்டும் 500-க்கும் மேல் பாதிப்பு இருந்தது. மற்ற மாவட்டங்களில் 500-க்கும் குறைவான கொரோனா பாதிப்புகளே பதிவாகி இருந்தது. அந்த வகையில் நேற்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 67 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,517 ஆண்கள், 2,645 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 162 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 220 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 911 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 756 பேரும், ஈரோட்டில் 641 பேரும், சேலத்தில் 419 பேரும், சென்னையில் 372 பேரும், திருப்பூரில் 386 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 31 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

155 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 433 ஆண்களும், 10 லட்சத்து 17 ஆயிரத்து 106 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 88 ஆயிரத்து 639 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 52 ஆயிரத்து 980 முதியவர் களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 98 பேரும், தனியார் மருத்துவமனையில் 57 பேரும் என 155 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை, ராணிப்பேட்டையில் தலா 15 பேரும், கோவையில் 12 பேரும், வேலூரில் 10 பேரும், திருச்சி, திருவள்ளூர், திருப்பத்தூரில் தலா 8 பேரும், சேலம், காஞ்சீபுரத்தில் தலா 7 பேர் உள்பட நேற்று மட்டும் 32 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 28 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்து 907 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

70,456 ஆயிரம் படுக்கைகள் காலி

தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 11 ஆயிரத்து 760 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 5 ஆயிரத்து 512 பேரும், ஐ.சி.யு. படுக்கைகளில் 4 ஆயிரத்து 816 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 38 ஆயிரத்து 264 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 880 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 312 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 456 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 8 ஆயிரத்து 473 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் 59 ஆயிரத்து 408 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

9,046 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 9,046 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,151 பேரும், ஈரோட்டில் 994 பேரும், திருப்பூரில் 538 பேரும், சேலத்தில் 710 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 67 ஆயிரத்து 831 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 49 ஆயிரத்து 845 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story