தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2021 8:11 PM GMT (Updated: 19 July 2021 8:11 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டு மக்களின் நலன் கருதி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நேற்று காலை திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோடு அருகே திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது. பின்னர் கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஆலையை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, கூடுதலாக 6 மாதம் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் இந்த முயற்சியை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தி, முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி தூத்துக்குடி மாவட்ட மக்களை காக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மனு கொடுக்க திரண்டு வந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story