சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட் கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 July 2021 3:19 AM GMT (Updated: 28 July 2021 3:19 AM GMT)

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ‘சிட்டி கேட் நிலையம்' மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

‘டொரண்ட்' கியாஸ் நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு வினியோக திட்டத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தின் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் ‘சிட்டி கேட் நிலையம்' 1.4 ஏக்கரில் ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு வினியோகம்

திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 25 சி.என்.ஜி. நிலையங்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் மேற்கொள்ள தயார்நிலையில் உள்ளன. வல்லூரில் உள்ள ‘சி்ட்டி கேட்' நிலையத்தில் இருந்து இந்த 25 சி.என்.ஜி. நிலையங்களுக்கு எரிவாயு கொண்டுவரப்பட்டு, வாகனங்களுக்கு எரிவாயு வினியோகம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இது அமைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். தற்போதுள்ள சி.என்.ஜி. வாகனங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்ணி, ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜினல் மேத்தா, செயல் இயக்குனர் பிரகாஷ் சஜ்னானி, துணைத்தலைவர் ஆர்.சித்தார்தன், தலைவர் (இயக்கம்) பிரசாத், பொதுமேலாளர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story