75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு விழா - ஏற்பாடுகள் தீவிரம்


75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு விழா - ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:46 PM GMT (Updated: 6 Aug 2021 5:46 PM GMT)

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு விழாவை நடத்த அரசு முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் 13-ந் தேதி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் காகிதம் இல்லாத பட்ஜெட் என்ற முறையில் இணையதளம் வாயிலாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது தமிழக சட்டசபையின் வரலாற்றில் நடக்கும் முதல் நிகழ்வாகும்.

மறுநாள் 14-ந் தேதி காலையில் வேளாண்மை துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுவும் தமிழக அரசின் வரலாற்றில் முதல் நிகழ்வாக பதிவு செய்யப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள், வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த வகையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே இந்த தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 14-ந் தேதி நள்ளிரவில் சட்டசபையில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. தமிழக கவர்னர் இந்த விழாவிற்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. நள்ளிரவில் விழா கொண்டாடும்போது, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதத்தில் மவுனம் அனுசரிக்கப்படும்.

மறுநாள் காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே முதன்முறையாகும். ஆக, பல சிறப்பு நிகழ்வுகள் ஒரு சேர வருவதால் இவற்றை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.

கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவின் 25-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடுவதற்காக அப்போதிருந்த முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். இந்தியாவின் சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்ததால், சட்டசபையில் 25-வது ஆண்டு விழாவை நள்ளிரவில் கொண்டாட வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்தார்.

அந்த விழா தொடர்பான நிகழ்வு, சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஆகஸ்டு 14-ந் தேதி நள்ளிரவில் 25-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்), சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.கள்) பங்கேற்றனர். தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் சபாநாயகர், மேலவைத் தலைவர், சட்டசபை முன்னவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

நள்ளிரவு ஆனதும் சட்டசபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடங்கள் மவுனம் காத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல 1987-ம் ஆண்டிலும் 40-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

Next Story