ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி நியமனம் செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டனர். இதேபோன்று, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரை நியமித்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதவிர, வழிகாட்டு குழுவில் 11 பேர் நியமிக்கப்படுவார்கள் என கூறினார். இதேபோன்று அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவியும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமன பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை ஐகோர்ட்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நியமனம் பற்றிய தேர்தல் ஆணைய உத்தரவு செல்லும் என்றும் தெரிவித்தது. இதேபோன்று, உட்கட்சி வழக்கை சிவில் நீதிமன்றத்தில்தான் தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story