ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்


ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
x
தினத்தந்தி 20 Sep 2021 10:51 PM GMT (Updated: 20 Sep 2021 10:51 PM GMT)

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 17-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர். இதில் இருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக்காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதை தங்களுக்கு அறிவுறுத்தவே தமிழக மக்கள் சார்பாக இக்கடிதம். ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையின் காரணமாக, ஒரு எதிர்க்கட்சியின் கடமையாக கருதி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற குறள் வழியில் தமிழக மக்கள் நலம் காக்க இக்கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story