நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்


நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 22 Sep 2021 10:17 PM GMT (Updated: 22 Sep 2021 10:17 PM GMT)

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி நீட் தேர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் ஒரு உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை. நீட் தேர்வின் தீவிளைவுகளை இந்த குழு பட்டியலிட்டுள்ளது.

அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்தில் இருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது. நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ். படிப்பில் சி.பி.எஸ்.இ. மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90 சதவீதம் பேர் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள்.

நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லி வரும் ஒன்று. இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன.

நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story