உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2021 9:14 PM GMT (Updated: 23 Sep 2021 9:14 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருப்பத்தூர்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்டமாக திருப்பத்தூரில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

தில்லுமுல்லுகளை முறியடித்து

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க. வினர் வெற்றிபெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. பச்சைப்பொய்யை மக்களிடம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை ஏமாற்றி வருகின்றனர். பச்சைப் பொய்யை கூறி ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகை கடன்கள் மட்டுமேதள்ளுபடி செய்யப்படவுள்ளது. அதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் போட்டுள்ளார்கள்.

ஓட்டுகளைபெற பச்சை பொய்யை சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

நிறைவேற்றமாட்டார்கள்

தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் நேரத்தில் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை நிலத்தை காட்டாமலேயே போய்விட்டார் கருணாநிதி. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கொண்டுவந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை.

மக்களுக்கான கட்சி அ.தி.மு.க.

தி.மு.க.வின் 4 மாத ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் போடுவது, அவதூறு பிரசாரம் செய்வது, முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடத்துவது போன்றவற்றை பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.

நான் 4 வருடம் 2 மாதம் முதல்-அமைச்சராக இருந்தேன். நான் நினைத்து இருந்தால் எவ்வளவு வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. எங்களுக்கு எதைகண்டும் பயமில்லை. மடியில் கனமில்லை. அ.தி.மு.க.வினருக்கு அச்சம் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மாணவர்கள் நாங்கள். எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story