கோவை பயிற்சி கல்லூரியில் விமானப்படை பெண் அதிகாரி கற்பழிப்பு; மற்றொரு அதிகாரி கைது


கோவை பயிற்சி கல்லூரியில் விமானப்படை பெண் அதிகாரி கற்பழிப்பு; மற்றொரு அதிகாரி கைது
x
தினத்தந்தி 26 Sep 2021 9:53 PM GMT (Updated: 26 Sep 2021 9:53 PM GMT)

கோவையில் பயிற்சி பெற வந்த விமானப்படை பெண் அதிகாரி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விமானப்படை பயிற்சி கல்லூரி
கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவர் வந்தார். அவர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் தீபக் எம்.தாமோரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தார். 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து பயிற்சிக்காக கோவை ரெட்பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரிக்கு வந்தேன். அங்கு என்னுடன் 30-க்கும் மேற்பட் டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த 10-ந் தேதி நான் பயிற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக எனது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட நான் அறையில் ஓய்வெடுத்தேன்.அப்போது எனது அறைக்குள் அதே கல்லூரியில் பயிற்சி பெறும் மற்றொரு அதிகாரியான சத்தீஷ்கரை சேர்ந்த அமித்தேஷ் ஹர்முக் (வயது30) என்பவர் அத்துமீறி நுழைந்தார். அவர், என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இது பற்றி பயிற்சி கல்லூரியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சிறையில் அடைப்பு
அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் அனைத்து மகளிர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கற்பழிப்பு கட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விமானப்படை அதிகாரி அமித்தேஷ் ஹர்முக்கை கைது செய்தார். பின்னர் அமித்தேஷ் ஹர்முக், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமித்தேஷ் ஹர்முக் தரப்பில் ஆஜரான வக்கீல், விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். ஆனாலும் அமித்தேஷ் ஹர்முக்கை 2 நாள் மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கோவை விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரியில் விமானப்படை பெண் அதிகாரி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story