அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்


அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2021 9:22 PM GMT (Updated: 18 Oct 2021 9:22 PM GMT)

அசைவ, மதுபிரியர்கள் வசதிக்காக மெகா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பல் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நடமாடும் பல் ஆஸ்பத்திரி வாகனத்தை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல் மருத்துவ சேவை

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி சார்பில் நடமாடும் பல் மருத்துவ வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இருப்பார்கள். இந்த நடமாடும் வாகனம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை வழங்க உள்ளனர்.

அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர்களின் அனுமதியை பெற்று, பள்ளி மாணவர்களுக்கும் இந்த பல் மருத்துவ சேவை வழங்க இருக்கின்றனர்.

சனிக்கிழமைக்கு மாற்றம்

தமிழகத்தில் தற்போது 2 பல் மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தேவை என்று கண்டறிந்து, ஆஸ்பத்திரி கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த மாதத்துக்கு (அக்டோபர்) தேவையான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வர தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 53 லட்சத்து 64 ஆயிரத்து 679 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி போடக்கூடாது என்ற தவறான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி போடாமல் பலர் இருக்கின்றனர்.

அவர்களின் வசதிக்காக இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு முகாம்கள் நடைபெறும் என்பது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story