டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை


டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2021 9:18 PM GMT (Updated: 19 Oct 2021 9:18 PM GMT)

மதிப்பு கூட்டு வரி வருவாயை கருத்தில் கொண்டு டீசல் விலையை தமிழக அரசு ஓரளவு குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இன்றியமையாத தன்மைவாய்ந்த டீசல் தற்போது அன்றாடம் உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளலாம் என்ற கொள்கை முடிவுதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.

டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடியாக விளங்குகிறது. டீசல் விலை உயர்வு என்பது பொருளாதாரத்தில் தொடர் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலும் டீசலில் ஓடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அனைத்து பொருட்களின் விலை என்பது டீசல் விலை உயர்வுடன் பின்னி பிணைந்துள்ளது.

கூடுதல் சுமை

அன்றாடம் ஏறிக்கொண்டே வரும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே வருகிறது.

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக செயல்பட ஆரம்பித்திருக்கின்ற நிலையில், தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப்பயணிகள், ஏழை, எளிய, நடுத்தரப்பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று பாசனத்துக்காக டீசல் பம்புசெட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஓரளவு குறைக்க வேண்டும்

தற்போதைய நிலையில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி டீசல் விலையை குறைப்பதுதான். எனவே முதல்-அமைச்சர், உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரிவருவாயை கருத்தில்கொண்டு, டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story