சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Nov 2021 7:28 PM GMT (Updated: 22 Nov 2021 7:28 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் குவைத், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.54 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 221 கிராம் தங்கத்தையும், ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், சிகரெட்டுகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வெளியே செல்ல வந்த பயணி ஒருவரை சந்கேதத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த சமையல் பாத்திரத்தின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 540 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்

அதேபோல் குவைத்தில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பயணியின் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 556 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள். மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் 125 கிராம் எடைகொண்ட 5 தங்க பட்டன்கள், 4 விலை உயர்ந்த ஐபோன்கள், 4,800 சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 3 பேரிடம் இருந்து ரூ.54 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 221 கிராம் தங்கத்தையும், ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், சிகரெட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story