வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன?


வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன?
x
தினத்தந்தி 24 Nov 2021 10:09 PM GMT (Updated: 24 Nov 2021 10:09 PM GMT)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறின. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மழை காலத்திற்கு முன்னதாக மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் அடுத்ததாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பினார்.

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டது.

பங்கேற்றோர்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர்,

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் என்.சுப்பையன் ஆகியோர் பங்கேற்றனர்.

அறிவுரைகள்

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, கனமழை காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவகால சவால்களை திறம்பட கையாள வேண்டும். நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், ஏரிக்கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

பொதுமக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மழை பொழிவு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்களுக்கான நிவாரண முகாம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

இலங்கை தூதர் சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இலங்கை நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேற்று சந்தித்து பேசினார். அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர்கள் எஸ்.கே.பிரபாகர், தெ.சு.ஜவஹர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிறந்த நினைவுத்திறனுக்காக இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் டி.சந்தரேஷை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்தினார்.

Next Story