அரசு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கே பணி: அனைத்து போட்டி தேர்விலும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம்


அரசு துறைகளில் தமிழக இளைஞர்களுக்கே பணி: அனைத்து போட்டி தேர்விலும் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம்
x
தினத்தந்தி 3 Dec 2021 8:11 PM GMT (Updated: 3 Dec 2021 8:11 PM GMT)

அரசு துறைகளில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சியை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயம் ஆக்கப்படும் என்று மனித வள மேலாண்மை துறையின் மானியக்கோரிக்கை தொடர்பான உரையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் அரசுக்கு அளித்த கருத்துருவின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வு முகமைகளால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் அனைத்திலும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளிலும் தமிழ்மொழி தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு ஆணைகள் வெளியிடுகின்றது.

தமிழ் மொழி தகுதித்தாள்

டி.என்.பி.எஸ்.சி.யை பொறுத்தவரையில், தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித்தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித்தேர்வுத்தாள், தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

குறிப்பாக குரூப்-1, குரூப்-2, 2ஏ ஆகிய பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை ஆகிய இரண்டு நிலைகளை கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித்தேர்வானது முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான (டெஸ்கிரிப்டிவ் டைப்) தேர்வாக நடத்தப்படும். இந்த தேர்வானது மொழிப்பெயர்த்தல், சுருக்கிவரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் மற்றும் கட்டுரை வரைதல் போன்ற தலைப்புகளை கொண்டதாக இருக்கும். 100 மதிப்பெண் கொண்டதாக அமைக்கப்படும் இந்த தகுதித்தாளில் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத்தேர்வின் இதரபோட்டித்தேர்வுத்தாள், தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

40 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும்

அதேபோல், குரூப்-3, குரூப்-4 தேர்வில் தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். இது 150 மதிப்பெண்களுக்கு ‘பகுதி-அ'-வில் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறி வகையில் வினாக்கள் அமைக்கப்படும். இதில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்ததாக ‘பகுதி-ஆ' தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மொத்த மதிப்பெண்களும் தரவரிசை பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், ஒரே நிலை கொண்ட இதர போட்டித்தேர்வுகளின் நடைமுறைகளாக உள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது. மேற்படி தமிழ் மொழி தேர்வானது பகுதி-அ என கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். இது தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. ஏற்கனவே சொன்னது போல், இதில் 40 சதவீதம் மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பகுதி-ஆ தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

இதர தேர்வு முகமைகள்...

இந்த ஆணை வெளியிடப்படும் நாள் முதல் டி.என்.பி.எஸ்.சி.யால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ்மொழி தாள் கட்டாயமாக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தேர்வு முகமைகளை பொறுத்தவரையில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளால் வெளியிடப்படும். அதேபோன்று தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில், தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் நிதித்துறையால் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story