தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு


தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 7:07 PM GMT (Updated: 10 Jan 2022 7:07 PM GMT)

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் நேற்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8,307 ஆண்கள், 5,683 பெண்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,190 பேரும், செங்கல்பட்டில் 1,696 பேரும், திருவள்ளூரில் 1,054 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 13 பேரும், அரியலூரில் 15 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 413 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,861 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு

அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு வந்த 27 ஆயிரத்து 346 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 348 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டு, அதில் 207 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது.

அந்தவகையில் தற்போது வரை 21 மாவட்டத்தில் 185 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 7 ஆயிரத்து 520 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்து 64 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

11 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 3 பேரும் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், கோவையில் இருவரும், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 31 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 866 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 547 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,127 பேரும், செங்கல்பட்டில் 235 பேரும், கோவையில் 183 பேரும் அடங்குவர். இதுவரையில் 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 62 ஆயிரத்து 767 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story