போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறையில் பணிபுரியும் 3,186 பேருக்கு ‘முதல்-அமைச்சர்’ பதக்கம் மு.க.ஸ்டாலின் உத்தரவு


போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறையில் பணிபுரியும் 3,186 பேருக்கு ‘முதல்-அமைச்சர்’ பதக்கம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 13 Jan 2022 11:52 PM GMT (Updated: 13 Jan 2022 11:52 PM GMT)

பொங்கல் திருநாளையொட்டி போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் பணிபுரியும் 3,186 பேருக்கு ‘முதல்-அமைச்சர்’ பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

சென்னை,

தமிழக போலீஸ்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு போலீஸ் துறையில் காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு ‘ தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பதக்கப்படி

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள், இரண்டாம் நிலை வார்டர்கள் நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வருகிற பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.

ரொக்கத்தொகை

மேலும், போலீஸ் வானொலி பிரிவு, நாய்படைப் பிரிவு மற்றும் போலீஸ் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் போலீஸ் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தகுந்தவாறு ரொக்கத்தொகை வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story