மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 21 Jan 2022 8:01 PM GMT (Updated: 21 Jan 2022 8:01 PM GMT)

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் சாலையில் அமைந்துள்ள கவுதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த பகுதியில் குடிநீர் வசதி செய்து தரும் வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவகர் சாலை வரை 2.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜெகநாதன் சாலை மற்றும் அசோக் அவென்யூ பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் அவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 40 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணியினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உத்தரவு

மேலும், ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிறைவாக, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி. விஜயராஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story