தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2022 12:17 AM GMT (Updated: 26 Jan 2022 12:17 AM GMT)

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள், கடந்த 23-ந்தேதி அன்று வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 300 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைகிறேன்.

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை இலக்காக கொண்டு செயல்படுவதையே காணமுடிகிறது.

மவுனமாக இருக்கக்கூடாது

இலங்கையைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மவுனமாக இருத்தல்கூடாது.

தமிழக மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story