கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 April 2022 8:01 PM GMT (Updated: 29 April 2022 8:01 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றனிடம் கோவையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலாவிடம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த அ.தி.மு.க. நிர்வாகி சஜிவன் மற்றும் அவரது அண்ணனிடம் தனிப்படையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதா உதவியாளரிடம் விசாரணை

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பினர். இதனைத்தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணி அளவில் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது கோடநாடு பங்களாவில் எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன. ஜெயலலிதா பங்களாவில் இருந்த போது யார் யாரெல்லாம் அங்கு வந்தார்கள், அங்கு ஆவணங்களை பாதுகாக்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.

Next Story