சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 782 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 2 தங்க சங்கிலிகள், 6 தங்க வளையல்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.31 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 662 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேேபால் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள இருக்கையின் அடியில் பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.

அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை கடத்தி வந்து இருக்கையின் அடியில் மறைத்து வைத்து சென்றதை கண்டுபிடித்தனர். அதில் இருந்த ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 120 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.98 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்ைன விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 782 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story