இலங்கையில் இருந்து தாய், மகன் உள்பட 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்


இலங்கையில் இருந்து தாய், மகன் உள்பட 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்
x

இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. எனவே அங்கிருந்து அகதிகளாக வெளியேறி தமிழகத்துக்கு அந்நாட்டு மக்கள் அவ்வப்போது வருகிறார்கள். அவ்வாறு வருகிறவர்கள் படகில் தப்பி வந்து, ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடியில் கரை சேர்கிறார்கள்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, இதுவரையிலும் இலங்கை அகதிகள் 80 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இந்தநிலையில் இலங்கை பேசாலை பகுதியில் இருந்து, ஒரு பிளாஸ்டிக் படகு மூலம் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என 3 பேர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, இலங்கை கொழும்பு டெமக்கோட்டையை சேர்ந்த ஜெசிந்தா மேரி(வயது 51), இவருடைய மகன் பிரவீன் சஞ்சய்(10) மற்றும் மன்னார் மாவட்டம் கொக்கு படையான் பகுதியை சேர்ந்த அனிஸ்டன்(31) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. பின்னர் 3 பேரும் மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

வாழ முடியவில்லை

ஜெசிந்தா மேரி ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கி இருந்தவர் என்பதும், கடந்த பிப்ரவரி மாதம்தான் மகனுடன் விமானம் மூலம் இலங்கை சென்றதும் தெரியவந்தது.

இந்தநிலையில், அங்கு வாழ முடியாமல் தான்வைத்திருந்த நகையை விற்று, அதில் கிடைத்த பணத்தை இலங்கையை சேர்ந்த படகோட்டிக்கு கொடுத்து, மகனுடன் தனுஷ்கோடிக்கு தப்பி வந்ததாக உருக்கமுடன் தெரிவித்தார்.

அனிஸ்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது மனைவி 3 மாதத்திற்கு முன்பே படகு மூலம் தமிழகம் வந்து விட்டதால் மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து வாழ்வதற்காகவே இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். நேற்று வந்த 3 அகதிகளுடன் சேர்த்து இதுவரையிலும் இலங்கையிலிருந்து மொத்தம் 83 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்த 3 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story